உங்களுடன் ஸ்டாலின் முகாம் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மக்களுக்கான அரசு
செய்யாறு : கோரிக்கைகள் மனுவாக பெற்று உடனுக்குடன் நிறைவேற்றும் விதமாக இந்த அரசு மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒ.ஜோதி எம்எல்ஏ பேசினார்.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம் நெடும்பிரை கிராமத்தில் முதல்வரின் முகவரித்துறை சார்பில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் அசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். ஏழை மகளிர்கள் பயன்பட வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், என்பதற்காகத்தான் உங்களுடன் ஸ்டாலின் போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.
முகாம்களை நம்பி வரும் தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. இந்த முகாமில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. தகுதியான மகளிருக்கு உரிமை தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
இன்றைக்கு தமிழகத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். 15 துறைகள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மனுவாக பெற்று உடனுக்குடன் நிறைவேற்றும் விதமாக இந்த அரசு மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. என்றைக்கும் நம் முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோபு, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மகாராஜன், தொழிலாளர் அணி துணை தலைவர் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பால.கோபால், மாவட்ட பிரதிநிதி சுந்தரேசன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், கழக நிர்வாகிகள் மேகநாதன், தங்கமணி, செல்லக்கண்ணு, கவியரசன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.