உடுமலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருப்பூர்: உடுமலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கப்பாண்டியன் (32) ஆகியோர் தங்கியிருந்து கடந்த 1 மாதமாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் சிலரும் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் நேற்று மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன், தனது மனைவி, மகளுடன் தந்தை மற்றும் சகோதரரை பார்க்க வந்தார். மாலையில் தந்தை மற்றும் 2 மகன்களும் மதுகுடித்தனர்.
3 பேருக்கும் போதை அதிகமானது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கினார். அதில் தந்தை பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்ததும் அங்கு வேலை பார்ப்பவர்கள், குடிமங்கலம் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கிருந்து எஸ்எஸ்ஐ சண்முகவேல் (58), ஆயுதப்படை காவலர் அழகு ஆகியோர் தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். அங்கு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்க முயன்றனர். ஆனால் 3 பேரும் போலீசாரை சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாள் மற்றும் கத்தியுடன் தாக்குதல் நடத்தினர்.
இதில், போலீசார் இருவரும் ஆயுதங்கள் இல்லாமல் சென்றதால், ஓட ஆரம்பித்தனர். ஆனால் சிறப்பு எஸ்எஸ்ஐ சண்முகவேலை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவரது நெற்றி மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை காவலர் அழகு, தப்பி சென்று குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்தை கூறினார். இதற்கிடையில், கொலை நடந்ததும், மணிகண்டனின் மனைவி தனது குழந்தையுடனும், தங்கபாண்டியனின் மனைவி தனது குழந்தையுடனும் அவசர அவசரமாக தோட்டத்தை விட்டு வெளியேறி நெடுஞ்சாலை துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து கோவை மண்டல டிஐஜி சசிமோகன், திருப்பூர் மாவட்ட எஸ்பி யாதவ் க்ரிஷ் அசோக் மற்றும் போலீசார் தோட்டத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டியனை கைது செய்தனர். மணிகண்டன் தப்பி சென்றார். தொடர்ந்து சண்முகவேலுவின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனிடையே எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணை நடத்தி வருகிறார். டிஜிபி சங்கர் ஜிவாலும் விரைகிறார்.