ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி வந்தது
திருமலை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி வந்தடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை சுவாமிக்கு மோகினி அலங்காரமும், முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கலைந்த கிளியுடன் கூடிய மாலை நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.
ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து இணை ஆணையர் மாரியப்பன், ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி சக்கரம்மாள், ஸ்தானிகம் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையான் கோயில் ஜீயர்கள் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாத்திடம் வழங்கினர்.
முன்னதாக மாலைகள் ஊர்வலமாக யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வர வாத்தியங்களுக்கு மத்தியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது. இந்த பூ மாலைகள் ஏழுமலையானுக்கும், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமிக்கு கிளியுடன் கூடிய மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பட்டு வஸ்திரம் புடவை மூலவர் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.