இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை: முதலமைச்சர் கடிதம்
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கருக்கு இன்று (03.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 03.11.2025 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும். அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர். இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள முதலமைச்சர். ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.