இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் சென்னை வந்தனர்
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியே 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மீன்பிடி வலைகள், படகுகளையும் பறிமுதல் செய்தனர். பிறகு இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதினார். இதற்கிடையே இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் மீனவர்களை படிப்படியாக விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் போன்றவை நடத்தினர். அதோடு மீனவர்கள் 15 பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர்.
மேலும் மீனவர்கள் 15 பேரையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் செய்தது. இந்நிலையில் நேற்று காலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 15 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.