இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்: மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கடந்த ஜூலை 28ம் தேதி, விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தது. அதோடு, மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 4 பேரையும் கைது செய்து, விசைப்படகு, மீன்பிடி வலைகளை பறித்தனர். பிறகு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுவித்து படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, அவசர கடிதங்கள் எழுதினார். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதனிடையே, இலங்கை நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் சிறையில் இருந்து விடுவித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
தூதரக அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். அதோடு அவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் இந்திய தூதரகத்தால் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கப்பட்டன. பிறகு அவர்களை, சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்க, விமான டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.