எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக். 13ல் இறுதி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளித்து அறப்போர் இயக்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு பதில்தர காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.