எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு 2 ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிய 19 மாதம் தாமதித்த ஒன்றிய அரசு: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. அதில், ரூ.98 கோடியே 25 லட்சம் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசின் அனுமதி கேட்க 19 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது குறித்து வழக்கில் மூன்று புலன் விசாரணை அதிகாரிகளாக இருந்த மயில்வாகனன், விமலா மற்றும் டாங்கரே பிரவீன் தரப்பில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, இந்த மனுக்கள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.