3 மாவட்டங்களில் ரூ.10.89 கோடியில் அமைய உள்ள விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்
சென்னை: சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதி, புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், புதிதாக கட்டப்பட உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதி, புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், புதிதாக கட்டப்பட உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.8.2025) அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், மாவட்ட விளையாட்டரங்கங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் உள்ளிட்ட விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை புதிதாக உருவாக்குதல், சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நுற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் புதிய விளையாட்டு விடுதி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 மாணவர்கள் தங்கி குத்துச்சண்டை பயிற்சி பெறும் வகையில் புதிய விளையாட்டு விடுதி, உணவருந்தும் கூடம், சமையலறை, பயிற்சி மேற்கொள்ளும் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் 4.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 200 மீ தடகள (மண்) பாதை, கையுந்துபந்து, கபாடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பகுதி ஆகிய விளையாட்டு வசதிகள் மற்றும் நுழைவு வாயில், நிர்வாக அலுவலக கட்டடம், கழிப்பறை வசதி ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள விளையாட்டு விடுதி, கோயம்புத்தூர் மாவட்டம் நேரு விளையாட்டு வளாகத்தில் 4.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். நா. எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் கலந்துகொண்டனர்.