திருவனந்தபுரம் - நேமம் இடையே ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு இரட்டை ரயில் பாதையில் குமரி ரயில்களின் வேகம் அதிகரிக்கும்
*ரூ,117 கோடியில் முதல் கட்ட பணிகள் தீவிரம்
நாகர்கோவில் : கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு ஏற்படுத்தப்படுவதால் குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும், தென் தமிழகத்துக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தவும், திருவனந்தபுரத்தில் இருந்து நேமம் வரையிலான ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டைப் பாதை திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
வழக்கமான இரட்டைப் பாதையில், ஒரு திசையில் மட்டுமே ஒரு பாதை ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ‘டுவின் சிங்கிள் லைன்’ முறையில், இரண்டு பாதைகளும் இரு திசைகளிலும் ரயில்களை இயக்க அனுமதிக்கின்றன.
இந்த நெகிழ்வுத்தன்மை, ஒரு பாதையில் பராமரிப்புப் பணி நடக்கும்போது அல்லது விபத்து போன்ற அவசர காலங்களில் மற்றொரு பாதையைப் பயன்படுத்தி ரயில்களை இயக்க உதவுகிறது. இது போக்குவரத்துத் தடையைக் குறைத்து, ரயில் இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்க உதவும்.
இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள், நேமத்தில் ரூ.117 கோடி மதிப்பீட்டில் ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிந்துள்ளன. ஆனால், முதலில் திட்டமிடப்பட்ட ஐந்து பிட் லைன்கள் மற்றும் பத்து நிறுத்துமிடங்கள் தற்போது முறையே மூன்று பிட் லைன்கள் மற்றும் மூன்று நிறுத்துமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக முடிவடையும்போது, நேமம் துணை முனையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். இது, திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் ரயில் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். தென் தமிழ்நாட்டிலிருந்து வரும் ரயில்கள் நேமத்தில் இருந்து புறப்படுவது அல்லது முடிவடைவது போன்றவை, தென் மாவட்டங்களுக்கான சேவைகளை மேம்படுத்தும்.
இது விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு ஏற்படுத்தப்படுவதால் குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.