காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செப்டம்பர் 4ம் தேதி வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
வேலூர்: வேளாண்கண்ணி மாதா கோயில் திருவிழா செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கிறது. இதற்காக கேரளா, கர்நாடகம், கோவா மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செர்லபல்லியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செப்டம்பர் 4ம் தேதி முதல் இருவழியிலும் ஒரு சேவையை வழங்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் 07093 செர்லபல்லி-வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 4ம் தேதி காலை 8.10 மணிக்கு செர்லபல்லியில் இருந்து நலகொண்டா, மிரியாலகுடா, நடிகோடே, பிதுகுரல்லா, சட்டேனப்பல்லி, குண்டூர், தெனாலி, சீராளா, நெல்லூர், ரேணிகுண்டா வழியாக காட்பாடிக்கு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வருகிறது. இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையை அடைகிறது.
அங்கிருந்து விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை மறுநாள் (செப்டம்பர் 5ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ரயில் எண் 07094 ஆக வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு காலை 7.18 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடியை காலை 9.55 மணிக்கு அடையும் இந்த ரயில் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு செர்லபல்லியை அடைகிறது. பயணிகளின் வசதிக்காக 1 ஏசி 2 டயர் கோச், 2 ஏசி 3 டயர் கோச் பெட்டிகளும், 17 சிலீப்பர் கிளாஸ் பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 லக்கேஜ் கம் பிரேக் வேகன்களும் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.