கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 14ம் தேதி ஹூப்ளி-காரைக்குடி இடையே சேலம் வழியே சிறப்பு ரயில்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சேலம்: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஹூப்ளி- காரைக்குடி இடையே சேலம், நாமக்கல் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினவிழா விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் நிரம்பி விட்டன. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்தவகையில், கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியே காரைக்குடிக்கு இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹூப்ளி-காரைக்குடி சிறப்பு ரயில் (07331) வரும் 14ம் தேதி இயக்கப்படுகிறது.
ஹூப்ளியில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, காவேரி, பிரூர், தும்கூர், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு வந்து சேர்கிறது. பிறகு நாமக்கல்லுக்கு அதிகாலை 5.40க்கும், கரூருக்கு காலை 6.28க்கும், திருச்சிக்கு காலை 8.45க்கும் சென்று, புதுக்கோட்டை வழியே காரைக்குடிக்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் காரைக்குடி- ஹூப்ளி சிறப்பு ரயில் (07332) வரும் 15ம் தேதி இயக்கப்படுகிறது. காரைக்குடியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8.35க்கும், கரூருக்கு இரவு 10.13க்கும், நாமக்கல்லுக்கு இரவு 10.48க்கும் வந்து சேலத்திற்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் 10 நிமிடத்தில் புறப்பட்டு, பங்காருபேட்ைட, பெங்களூரு வழியே ஹூப்ளிக்கு அடுத்தநாள் மதியம் 2.40 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.