சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்தாண்டு ஜன.24ல் நடத்த டிஆர்பி திட்டம்
சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையின் படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு 2026 ஜனவரி 24ம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனுவின் பேரில் வழங்கப்பட்ட தீர்ப்பின் பேரில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை 2026 மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
2026ம் ஆண்டு தேர்வு முடிவுகளின் ஆய்வுக்கு பிறகு மீதம் தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027ம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை231ன்படியும், தற்ேபாது தமிழ்நாடு பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் சிறப்பு தகுதித் தேர்வுகள் 2026ல் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்கிணங்க 2026 ஜனவரி மாதத்தில் சிறப்பு தகுதித் தேர்வு உத்தேசமாக 24ம் தேதி தாள்1, மற்றும் 25ம் தேதி தாள் 2க்கான தேர்வுகள் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை டிசம்பர்(2026) மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்பு தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்.