சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும் பாமக சட்டப்பேரவை குழுவை அங்கீகரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடர்ந்து மறுத்து வருகிறார். பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கடந்த ஜூலை 3ம் நாள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவைக் கட்சிக் கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாள்கள் ஆகின்றன.
அதேபோல், சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் கடந்த செப்டம்பர் 24ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு 24 நாள்களாகி விட்டன. ஆனாலும் பயனில்லை. பேரவைத் தலைவர் அறத்திற்கு பணிய வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத்தலைவராக சதாசிவம், கொறடாவாக சி.சிவக்குமார் ஆகியோரை அங்கீகரிக்க வேண்டும்.