வருடத்துக்கு 50 செயற்கைகோள்கள் ஏவ திட்டம்; விண்வெளி மையம் அமைக்க முதற்கட்ட பணிக்கு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
நாகர்கோவில்: வருடத்துக்கு 50 செயற்கை கோள்கள் வீதம், 3 ஆண்டுகளில் 150 செயற்கை கோள்கள் ஏவ திட்டமிட்டு இருப்பதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன், நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: விண்வெணி துறையில் 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக, இஸ்ரோவின் திட்டங்கள் இருக்கும். மற்ற நாடுகளுடன், இந்தியாவுக்கு போட்டி இல்லை. ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இஸ்ரோவின் வளர்ச்சி அமைந்து இருக்கும். அதற்கான இலக்கை நோக்கி நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம். மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மிகப்பெரிய வளர்ச்சியில் உள்ளது. 8 ஆயிரம் ஏக்கரில் மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையம் அமைந்துள்ளது. ரூ.1200 கோடியில் 3, 4 ஆய்வு கூடங்கள் உள்ளன. மகேந்திரிகிரி ஐஎஸ்ஆர்ஓ மையத்துக்கு, ஒன்றிய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
விண்வெளி துறையில் தனியார் என்பது வரவேற்க கூடியதாகும். தற்போது விண்ணில் 57 செயற்கை கோள்கள் செலுத்தி உள்ளோம். இன்னும் 3 ஆண்டுகளில் 3 மடங்கு எண்ணிக்கையை அதிகரித்து கூடுதலாக 150 செயற்கை கோள்கள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. அரசு மட்டும் இதை செய்ய முடியாது. தனியார் பங்களிப்பும் இருக்க வேண்டும். முழுக்க, முழுக்க அவர்கள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில்தான், இந்த திட்டத்தை செய்வார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை இஸ்ரோதான் செய்யும். எனவே தனியார் பங்களிப்பு என்பது பிரதமரின் சிறப்பான திட்டமாகும். பேரிடர் எச்சரிக்கை தொடர்பாக துல்லியமான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இஸ்ரோ செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. புவி கண்காணிப்பு செயற்கைகோள் திட்டங்களுக்கு முக்கியத்தவம் கொடுக்கிறோம். சந்திரயான் 4 மற்றும் சந்திரயான் 5 ஆகிய திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான் 5 திட்டம் ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி மையம் 2035ல் அமைக்கவும் திட்டம் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. நாசா கூட நிறைய திட்டம் உள்ளது. அமெரிக்காவுடன் 6000 கிலோ கிராம் தொலை தொடர்பு செயற்கைகோளை வணிக ரீதியாக நமது ராக்கெட்டில் இருந்து செல்ல இருக்கிறது. டிசம்பரில் இது அனுப்பி வைக்கப்படும். இதற்கான தேதி முடிவாகவில்லை. சுபான்ஷூ சுக்லா நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார். அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டு முயற்சியில் சென்றார். 2040ல் இந்தியாவின் ராக்கெட் மூலம் சந்திரனுக்கு ஆட்களை அனுப்ப இருக்கிறாம். இவ்வாறு அவர் கூறினார்.