விரைவில் மெகா கூட்டணி: அன்புமணி ஆசை
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, பாமக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசுகையில், அய்யா (ராமதாஸ்) போராட்டத்தை அறிவித்தால், கடிதம் வரும். அந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அவர் பின்னால் நின்றோம். இன்றும் அவர் பின்னால் இருக்கிறோம். நான் முதலமைச்சரானால், முதல் 2 மாதத்தில், படித்தவர் என்ன வேலை செய்கிறார் என்பது போன்ற கணக்கெடுப்பு நடத்துவேன் என்றார்.
பின்னர், அன்புமணி அளித்த பேட்டியில், தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலையில் சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை. வரும் 17ம் தேதி எனது தலைமையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்க அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் வெற்றிக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதே காரணம். சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.சுவாமி தரிசனம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி, மனைவி சவுமியா மற்றும் மகள்களுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
* ஜி.கே.மணி துரோகியா?
ஜி.கே.மணி தனது பெயரை குறிப்பிட்டு துரோகி என்று அன்புமணி சொன்னால் கட்சியில் இருந்து விலக தயார் என தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, பதில் சொல்ல விரும்பவில்லை. கட்சி தொண்டர்களிடம் பேசுகிறேன் என அன்புமணி கூறினார்.