எஸ்ஐஆர் பணி ஆய்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக வார் ரூம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் திருத்த விவகாரத்தில் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டும் போதாது, நீங்கள் சேர்ப்பதற்காக கொடுத்த பெயரை நீக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்குரிமையை பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களே கவனமாக இருங்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் மாவட்டம் வாரியாக ‘வார் ரூம்’ அமைக்கப்படும். சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் தனியாக ‘வார் ரூம்’ அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், விஜயன், பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, டி.என்.அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.