சின்கியுபீல்ட் கோப்பை செஸ் 2ம் இடத்தில் தொடரும் தமிழகத்தின் பிரக்ஞானந்தா
சின்கியுபீல்ட்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகளில், 6 சுற்றுகள் முடிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் நகரில், சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இத் தொடரின் 6வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. போலந்து கிராண்ட் மாஸ்டர் ஜேன் கிறிஸ்டோஃப் துடா உடன் நடந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, 32வது நகர்த்தலில் டிரா செய்தார்.
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் டிரா செய்துள்ள பிரக்ஞானந்தா, 3.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். நேற்று நடந்த மற்ற போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிந்தன. 6 சுற்றுகள் முடிவில், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியனும், 3.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிரக்ஞானந்தாவுடன் பகிர்ந்து கொள்கிறார். தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், 3 புள்ளிகளுடன், அமெரிக்க வீரர்கள் வெஸ்லி ஸோ, சாமுவேல் செவியன், பிரான்ஸ் வீரர்கள் அலிரெஸா ஃபிரோஸா, மேக்ஸிமே வஷியர் லாக்ரே ஆகியோருடன் 4ம் இடத்தில் உள்ளார்.