சிங்கப்பூருக்கு முருங்கைக்காய் ஏற்றுமதி! அசத்துகிறார் அணத்தலை விவசாயி
முருங்கைக்காயை கிலோ 20 ரூபாய்க்கு ஏற்றுமதி பண்றேன். பெட்டி வச்சி தேனீ வளர்த்து, முருங்கைத்தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத்தேனை கிலோ 600 ரூபாய்க்கு விற்கறேன்” என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ராஜகோபால். இவர் தூத்துக்குடி கிராமம் அணத்தலை கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதில் கிடைக்கும் முருங்கைக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். முருங்கை மரங்களுக்கிடையே தேன் பெட்டிகளை வைத்து தேன் சேகரிப்பிலும் ஈடுபடுகிறார். இவரது முருங்கை சாகுபடி மற்றும் தேன் சேகரிப்பு குறித்து தெரிந்துகொள்ள அணத்தலை கிராமத்திற்கு சென்றோம். நம்மை வரவேற்று பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “மொதல்ல ஒன்றரை ஏக்கர்ல முருங்கை போட்டிருந்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் அதிகமாக்கினோம். இப்போ 7 ஏக்கர்ல 800 முருங்கை மரம் நம்மகிட்ட இருக்கு. ஏக்கருக்கு 120 கொப்பு நடலாம்.
20 அடிக்கு 20 அடி இடைவெளியில வைக்கணும். மொதல் மரத்துக்கு கொப்பு, நம்ம ஊர்லயே பக்கத்துல ஒரு அண்ணன் கிட்ட இருந்து பிஏ டேனியல் என்ற ரகம் வாங்கியிருந்தோம். அதுக்கப்புறமா நம்ம மரத்துல இருந்தே வெட்டி நட ஆரம்பிச்சிட்டோம். மரம் வைக்கும்போது குழி போட்டு, சொட்டுநீர் பாய்ச்சி கொப்பு வச்சிடலாம். ஒரு 7 நாள் கழிச்சி இலைல புழு வராம இருக்கறதுக்காக ஒரு மருந்தடிக்கணும். பெறவு, பூ வைக்கற டைம்ல 10 நாளைக்கு ஒரு தடவ மருந்து அடிக்கணும். அந்த டைம்ல மழை வந்துடக்கூடாது. மழை வந்தா பூ கொட்டிரும். மூணு மாசத்துலயே பூ பிடிச்சி, பிஞ்சு வர ஆரம்பிச்சிடும். 3 ஆம் மாசம் சாணி உரம் வைக்கணும். காஞ்ச எருவா பாத்து , மொத வருஷம் ஏக்கருக்கு ஒரு ட்ராக்டர் (3 டன்) வைக்கணும். ரெண்டாவது வருஷத்துல இருந்து 2 ட்ராக்டர் (6 டன்) எரு வைக்கணும். 6 மாசத்துக்குப் பிறகுதான் கூடுதலா காய்க்கும்” என வளப்பு முறை பற்றிக் கூறினார்.``எங்க நிலம் இருக்குறது மணல்பகுதி. அதனால சொட்டுநீர்ப்பாசனம்தான் பண்றோம். தெனமும் 2 மணி நேரம் கட்டாயம் தண்ணி விட்டாவணும். களிமண் நிலமா இருந்தா தெனமும் 1 மணி நேரம் சொட்டுநீர் பாசனத்துல தண்ணி விட்டா போதும். பாய்மானம்ன்னா வாரத்துக்கு ஒரு தடவ விட்டா போதும். போர்வெல் போட்டிருகோம். சொட்டு நீர் பாசனம் போட ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
அதுல 75% மானியமும் தர்றாங்க. விஓ கிட்டருந்து எடத்துக்கான பட்டா சிட்டா மட்டும் நாம வாங்கித் தரணும். பாசனக்குழாய் டீலரே மானியம் வாங்கற வேலைய செய்வாங்க. நாம 25% காசு கட்டினா போதும். குழாய் வாங்க சுமாரா 15 ஆயிரம் ரூபாயும், குழாய் அமைக்கற வேலைக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஆகும். மொத்தமா ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபா ஆகும். சொட்டுநீர் பாசனம் போட்டா 10 வருஷத்துக்கு தாங்கும். ஒரு தடவ மானியத்துல சொட்டுநீர் பாசனம் போட்டுட்டு, மறுபடியும் மானியத்துல புதுசா போடணும்ன்னா 7 வருஷத்துக்கு அப்புறம் விண்ணப்பிக்கலாம். இதுக்கு நடுவுல குழாய் ஏதும் சேதமானா, நாமதான் கைக்காசு போட்டு மாத்திக்கணும்” என நீர்பாசனம் பற்றிக் கூறினார். ஏற்றுமதி பற்றிப் பேசிய ராஜகோபால் “ஆறு மாசத்துக்கு அப்புறம் காய் பறிக்கலாம். வெயில் அதிகமா இருந்தா 2 நாளைக்கு ஒரு தடவயும், வெயில் கம்மியா இருந்தா 3 நாளைக்கு ஒரு தடவயும் பறிக்கணும். ஏற்றுமதிக்கு கைக்கு எட்ற காயைத்தான் பறிக்கணும். அப்பதான் காயை காம்போட பறிக்க முடியும். காய் காம்போட இருந்தாத்தான் 4 நாளைக்கு வதங்காம இருக்கும். காய் பறிச்சதுல இருந்து வாடிக்கையாளர் கைல போய் சேர்றதுக்கு கப்பல்ல போறதுக்கு ரெண்டு நாள், கடையில ரெண்டு நாள்ன்னு மொத்தமா 4 நாள் ஆகும். அதனால காம்போட பறிக்கற காயைதான் எக்ஸ்போர்டுக்கு விக்க முடியும். ரெண்டரை அடியிலர்ந்து மூணு அடி இருக்குற காயைத்தான் எக்ஸ்போர்ட் பண்ண முடியும். இப்போ துபாய், சிங்கப்பூருக்கு அனுப்பறோம்’’ என்றார்.
(ராஜகோபாலின் முருங்கை சாகுபடி மற்றும் தேன் சேகரிப்பு குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்.)
தொடர்புக்கு:
ஆ.ராஜகோபால்: 93842 14456.