இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 20% முதல் 25% வரை வரி விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்..!!
வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா, 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒப்பந்தம் பேசலாம் என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் காலக்கெடுவைப் பயன்படுத்தி, சில நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் போட்டு, தங்களுடைய நாட்டிற்கான வரி விகிதத்தை குறைத்துள்ளது. ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு வராத நாடுகளுக்கு டிரம்பே கடிதம் எழுதி வருகிறார்.
இந்தியா இப்போது வரை அப்படி எந்த ஒப்பந்தமும் அமெரிக்கா உடன் போடவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறது. இதை இந்திய அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. டிரம்பும் பல முறை இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துவிட்டார். ஆனால், ஆகஸ்ட் 1ம் தேதி வர, இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்நிலையில் டிரம்ப், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பு கூறியதாவது; இந்தியா நமக்கு நல்ல நண்பன். ஆனால், பிற நாடுகளை விட இந்தியா நம் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது.
இப்போது நான் பொறுப்பில் இருக்கிறேன். அதனால், அது இனி நடக்காது. வர்த்தக ஒப்பந்தங்கள் நன்கு வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். பிற நாடுகளுக்கும் நன்கு வேலை செய்யலாம். முக்கியமாக, இது அமெரிக்காவிற்கு நன்கு வேலை செய்கிறது என்று கூறியுள்ளார். இந்தியா மீது 20 - 25% வரி விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, அப்படி தான் நினைக்கிறேன் என்று டிரம்ப் பதில் அளித்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதி முதன்முதலாக பரஸ்பர வரி அறிவிக்கப்பட்ட போது, இந்தியா மீது 26% வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.