திருமூர்த்தி அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை: திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு 27.07.2025 முதல் 31.05.2026 வரை, நீரிழப்பு உட்பட மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப்பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு ஐந்து (5) சுற்றுகள், 27.07.2025 முதல் 09.12.2025 வரை, 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப உரிய இடைவெளிவிட்டு, 10250 மில்லியன் கன அடிக்கு தேவைக்கேற்ப மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும் ஆக மொத்தம் 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.