8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை சுனாமி தாக்கியது: 13 அடி உயரம் வரையிலும் எழுந்த கடல் அலைகள்; பசிபிக் பெருங்கடல் நாடுகளில் அபாய எச்சரிக்கை
குரில் தீவில் அமைந்துள்ள செவெரோகுரில்ஸ்க் நகரில் மீன்பிடி துறைமுகம் சுனாமி அலைகளால் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகவும் நகர மேயர் அலெக்சாண்டர் ஓவ்சியானிகோவ் தெரிவித்துள்ளார். சுனாமி அலைகளால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடலோர பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதே போல, ஜப்பானில் காலை 8.25 மணிக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள ஹமனகா நகரம் மற்றும் இவாட்டில் உள்ள குஜி துறைமுகத்தில் 2 அடி உயர சுனாமி அலைகள் பதிவாகியதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கும் அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் இடையில் உள்ள மிட்வே அட்டோலின் தீவுகளில் 6 அடி வரையிலும் அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் கூறினார். அவர் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து கடலோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். இதன் காரணமாக ஹவாய் தீவின் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் சுமார் 2 அடி உயர சுனாமி அலைகள் எழுந்தன. சுனாமியின் தாக்கம் சில மணி நேரத்தில் இருந்து ஒருநாள் வரையிலும் நீடிக்கும் என்பதால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், அமெரிக்காவின் வாஷிங்டன், கலிபோர்னியாவை உள்ளடக்கிய மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
* ஒருநாள் கழித்தும் சுனாமி தாக்கலாம்
அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் சுனாமி எச்சரிக்கை ஒருங்கிணைப்பாளர் டேவ் ஸ்னைடர் கூறுகையில், ‘‘சுனாமி என்பது ஒரு அலை மட்டுமல்ல. இது நீண்ட காலத்திற்கு சக்திவாய்ந்த அலைகளின் தொடர். சுனாமிகள் போர் விமானத்தைப் போல மணிக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் ஆழமான நீரில் கடலை கடக்கின்றன. அவை கரையை நெருங்கும்போது, வேகத்தைக் குறைத்து குவியத் தொடங்குகின்றன. அதனால் தான் அலைகள் பல அடி உயரத்திற்கு எழத் தொடங்குகின்றன. பொதுவாக சுனாமியின் தாக்கம் சில மணி நேரம் நடக்கலாம் அல்லது ஒருநாள் கழித்தும் தாக்கலாம்’’ என்றார்.
* இந்தியாவை சுனாமி தாக்குமா?
ரஷ்யாவின் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எந்த சுனாமி அபாயமும் இல்லை என இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2004ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமியில் இந்தியா உட்பட 11 நாடுகளில் சுமார் 2.20 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
* உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
தேதி நாடு ரிக்டர் அளவு
1960
மே 22 சிலி, வல்டிவியா 9.5
1964
மார்ச் 27 அமெரிக்க அலாஸ்கா 9.2
2004
டிச.26 இந்தோனேசியா சுமத்ரா 9.1-9.3
2011
மார்ச் 11 ஜப்பான் டோஹோகு 9.1
1952
நவ.4 ரஷ்யா கம்சாட்கா தீபகற்பம் 9
2025
ஜூலை 29 ரஷ்யா கம்சாட்கா தீபகற்பம் 8.8
2010
பிப். 27 சிலி மவ்லி 8.8
1906
ஜன. 31 ஈகுவடார்- கொலம்பியா கடல் 8.8
1965
பிப். 4 அமெரிக்கா அலாஸ்கா 8.7
1950
ஆக. 15 இந்தியா அருணாச்சல் 8