9 ஆண்டு பாலியல் உறவு இருவர் சம்மதம் அடிப்படையிலானது திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2014ல் பக்கத்து வீட்டு இளம்பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார். இருவரும் காதலித்துள்ளனர். அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்ய இளைஞர் மறுத்துள்ளார். வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் உறவில் இருந்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்ய மறுத்து வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், இளைஞர் மீது பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வள்ளியூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளையில், இளைஞர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘என் மீதான புகார் பொய்யானது; எனக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை. காலம் கடந்து தான் பெண் புகார் கொடுத்துள்ளார். எனவே, அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்துள்ளனர். இந்த நீண்டகால பாலியல் உறவின்போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது, இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலான உறவு என்பதைத் தான் குறிக்கிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதிலும் எந்த குற்றச்சாட்டும் தெரியவில்லை. நீதிமன்றம் தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை அறிந்திருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து உறவில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்கு உடல் ரீதியான நெருக்கத்தில் இருக்கும் நிலையில், அந்த உறவில் அடுத்ததாக முறிவு ஏற்பட்ட பின் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு.
இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் உள்ளது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா? திருமண எதிர்பார்ப்பு அல்லது வெறும் பரஸ்பர இன்பமா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிப்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.
உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. சமீப காலமாக இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் அதிகமாக கண்டு உள்ளது. மனுதாரருக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது.