பாலியல் வழக்கில் பிடிபட்ட இளம்பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த டிஎஸ்பி: தற்கொலை செய்த இன்ஸ்பெக்டர் கடிதத்தால் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தொட்டில்பாலம் பகுதியை சேர்ந்தவர் பினு தாமஸ் (52). இவர் பாலக்காடு மாவட்டம் செர்ப்புளசேரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இவர் தன்னுடைய குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. 32 பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த சில பரபரப்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன் விவரம் வருமாறு:
கடந்த 2014ல் நான் பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தேன். தற்போது கோழிக்கோடு மாவட்டம் வடகரை டிஎஸ்பியாக இருக்கும் உமேஷ் அப்போது வடக்காஞ்சேரி இன்ஸ்பெக்டராக இருந்தார். ஒரு நாள் பாலக்காட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் வழக்கில் நாங்கள் கைது செய்தோம். ஆனால் உமேஷ் பின்னர் அவரை விடுவித்து விட்டார். அன்று இரவே உமேஷ் என்னையும் கட்டாயப்படுத்தி அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது 2 குழந்தைகள் மற்றும் தாய் கண்ணெதிரே அவரை பலாத்காரம் செய்தார்.
தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் விபச்சார வழக்கில் பிடிபட்டதாக வழக்கு பதிவு செய்து பத்திரிகைகளுக்கு படத்துடன் தகவல் கொடுப்பேன் என்று அவர் மிரட்டினார். இதனால் அந்த இளம்பெண் உமேஷின் மிரட்டலுக்கு பணிந்தார். என்னிடமும் அந்த பெண்ணை பாலத்காரம் செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு பின்னர் மன ரீதியாக தொடர்ந்து என்னை ெகாடுமைப்படுத்தி வந்தார். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிஎஸ்பியின் மீது கூறப்பட்டுள்ள இந்த பலாத்கார புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.