செங்கோட்டையனை நீக்க தயக்கம் இல்லை 3 பேரும் ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் ஒன்று சேர்வது வேஸ்ட்: துரோகிகளால்தான் அதிமுக தோற்றது என எடப்பாடி ஆவேசம்
திருமங்கலம்: ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி ஆகியோர் ஒன்றிணைவதால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இப்படியான துரோகிகளால்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். திருமங்கலம் அருகே கப்பலூரில் அவர் அளித்த பேட்டி: ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து தேவர் குருபூஜைக்கு சென்றது துரோகத்தை வீழ்த்துவதற்காக என்று கூறியுள்ளனர். நான்கு வருடமாக இதையே கூறுகின்றனர். சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறுவது, இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. அது கற்பனையாகக்கூட இருக்கலாம். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து போட்ட திட்டத்தினால், கடந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் திமுக ஜெயிக்கும் என மக்கள் பேசுவதாக கூறியுள்ளார். இப்படிப் பேசியுள்ள அவர், எப்படி உண்மையான அதிமுகக்காரராக இருப்பார்? அதிமுகவை பொறுத்தவரை துரோகம் செய்தவர்கள் மற்றும் தலைமையின் கருத்தை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து களை எடுக்கப்படுவர். எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. எங்களிடம் இருப்பதே உண்மையான அதிமுக. எங்களிடம் இருப்பவர்கள் அசையாமல் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றிணைவது வேஸ்ட். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஓபிஎஸ் உடன் இரண்டு பேரும் சேர்வது எதைக் குறிக்கிறது என்றால், அவர்கள் திமுகவின் பி டீமை சேர்ந்தவர்களாக இருப்பதை காட்டுகிறது. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. கட்சிக்குத் துரோகம் செய்த யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 2021ல் அதிமுக வெற்றி பெறாததற்கு காரணம் இப்படியான துரோகிகள் இருந்ததால் தான். தற்போது கட்சியில் உள்ள களைகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இந்த களையெடுப்பால் அதிமுக பயிர் செழித்து வளரும். இவ்வாறு அவர் கூறினார்.
* தவெக சேர பிள்ளையார் சுழி என பேசியது ஏன்?
எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரங்களில் மட்டுமே சொல்ல முடியும். தற்போது ஒவ்வொரு கட்சிகளும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி சேர்ந்தால் கூட்டணி தத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். தவெக, அதிமுக கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருந்த போது தவெக தொண்டர் கட்சிக்கொடியை ஆட்டினார். அப்போது பிள்ளையார் சுழி போட்டதாக தெரிவித்தேன். இதில் என்ன தவறு உள்ளது என்றார்.
* பசும்பொன்னில் உருவான எங்கள் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் சபதம்
பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டியளித்தனர். ஓபிஎஸ் கூறுகையில், ‘‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சன்னதியில் ஜெயலலிதாவின் ஆட்சி, எம்ஜிஆரின் ஆட்சி மீண்டும் உருவாக நாங்கள் சபதம் மேற்கொண்டுள்ளோம். எங்களோடு டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோரும் வந்துள்ளனர். நாங்கள் இணைந்து செயல்படுவோம். பசும்பொன்னில் உருவான இந்த கூட்டணி தொடரும்’’ என்றார். இதைத்தொடர்ந்து, மதுரை அருகே கப்பலூர் தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்சிடம் ‘‘2021ல் துரோகிகளால் தான் அதிமுக தோல்வியடைந்ததாக இபிஎஸ் கூறியுள்ளாரே’’ என்ற கேள்விக்கு ஓபிஎஸ், ‘‘யாரால் தோல்வியடைந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்’’ என பதில் அளித்தார்.
* பழைய நண்பர்கள் அப்படிதான் இருப்பாங்க... நயினார் மழுப்பல்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ஓபிஎஸ், செங்கோட்டையன் பழைய நண்பர்கள் என்பதால் பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணம் செய்திருப்பார்கள். இதேபோல் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக புஸ்ஸிஆனந்த் ஆகியோர் தனித்தனி விமானங்களில் பயணிக்க முடியாது என்பதால் ஒரே விமானத்தில் சென்றிருப்பார்கள் என்றார்.
* எடப்பாடிதான் எதிரி அவரை வீழ்த்துவோம்: டிடிவி திட்டவட்டம்
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘எம்ஜிஆர் கால மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் இப்போது எங்களுடன் வந்திருக்கிறார். ஜெயலலிதா, பசும்பொன்னுக்கு வருவதற்கு முன்பு ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்கள் முன்னதாக வந்திருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். தற்போது ஜெயலலிதாவின் தொண்டர்களை காப்பதற்காக எங்களோடு அவரும் வந்திருக்கிறார். மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம்’’ என்றார். ‘‘எடப்பாடிக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா’’ என கேட்டதற்கு, ‘‘துரோகத்தை வீழ்த்தும் வரை நாங்கள் தொடர்வோம்’’ என்றார். ‘‘செங்கோட்டையன் இன்னும் அதிமுகவில் தானே இருக்கிறார்’’ என்ற கேள்விக்கு,‘‘செங்கோட்டையன் ஏற்கனவே இங்கு வருவதாக கூறினார். தற்போது வந்துவிட்டார். அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது. எடப்பாடி மட்டும் தான் எங்களுக்கு எதிரானவர். ஜெயலலிதாவின் தொண்டர்களாக நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம்’’ என்றார்.
* எத்தனை பேரை நீக்குவார் என்று பார்ப்போம்: சசிகலா சவால்
மதுரையில் சசிகலா நேற்று மாலை அளித்த பேட்டி: அதிமுகவை ஒன்றிணைப்பதை நான் நிச்சயமாக செய்வேன். சர்ப்ரைசாக எல்லாமே நடக்கும். வெயிட் அன்ட் சீ. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம் எத்தனை பேரைத்தான் கட்சியில் இருந்து அவர் நீக்க முடியுமென்று. எம்ஜிஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து கொண்டுள்ளேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறையாக கட்சியில் ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன்.
2021ல் துரோகிளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும். எப்படி டீல் செய்வேன் எனத் தெரியும். இப்போது இருப்பவர்கள் போல நானும், ஜெயலலிதாவும் ஸ்பூன் பீடிங்கில் வந்தவர்கள் இல்லை. தலைவர் மறைவு, அதன் பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாகவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும்.இவ்வாறு தெரிவித்தார்.
