ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!
சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி செலவில் செமி கண்டக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை செயல்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடி, செமி கண்டக்டர் சோதனை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செமி கண்டக்டர் உபகரணங்கள் ஒப்புதல் திட்டத்திற்கு ரூ.50 கோடி, சிறிய அளவிலான செமி கண்டக்டர் சிப் திட்டத்திற்கு ரூ.100 கோடி, இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிக்க ரூ.25 கோடி என்று 5 வகையான திட்டங்களை செயல்படுத்த அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் வடிவமைப்பு திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊதிய வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை பல்லடத்தில் தலா 100 ஏக்கரில் செமி கண்டக்டர் உற்பத்தி இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இந்த இயக்கம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.