கேரளாவில் பள்ளி மாணவி பலாத்காரம்: தாயின் ஆண் நண்பர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (40). ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கண்ணூரை ஒரு இளம்பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பிளஸ் ஒன் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். நாளடைவில் இளம்பெண்ணுக்கும், அனீஷுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் கண்ணூர் தளிப்பறம்பு அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இளம்பெண் தன்னுடைய இரு மகள்களையும் லாட்ஜுக்கு அழைத்து சென்றிருந்தார்.
அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவில் லாட்ஜில் வைத்து அனீஷ், இளம்பெண்ணின் 2வது மகளை பலாத்காரம் செய்தார். இதை சிறுமியின் அக்கா பார்த்துள்ளார். உடனே சிறுமி தன்னுடைய தாயிடம் கூறினார். ஆனால் வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இளம்பெண் தன்னுடைய மகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையே சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையில் பலாத்கார விவகாரம் தெரியவந்தது.
இதுகுறித்து மாதமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அனீஷை கைது செய்தனர்.