பள்ளிப்பட்டு அருகே இன்று அதிகாலை கிராவல் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மின் கம்பங்கள் மீது மோதியது: 2 மின்கம்பம் உடைந்து சேதம்: அதிர்ஷ்டவசமாக தப்பினர்
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி சாலையோர மின் கம்பம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று அதிகாலை பள்ளிப் பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிப்பட்டு அருகே ஈடிகப்பேட்டை பகுதியில் ஆந்திர அரசுக்கு சொந்தமான மலையில் கிராவல் குவாரி செயல்பட்டு வருகிறது. ராட்சத பொக்லைன் மூலம் கிராவல் மண் வெட்டி எடுத்து டிப்பர் லாரிகளில் தமிழக கிராமங்கள் வழியாக எடுத்து சென்று சித்தூர்-தச்சூர் 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தினமும் அதிகாலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் விதிமுறைமீறி அதிக பாரத்துடன் கிராவல் மண் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் பள்ளிப்பட்டு-நகரி மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து வருகிறது. குறிப்பாக, கிராமங்கள் நிறைந்த பகுதியில் டிப்பர் லாரிகள் அதிக பாரம் மற்றும் வேகத்துடன் சென்று வருவதால் கிராம மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை குவாரியில் இருந்து கிராவல் மண் நிரப்பி சென்ற டிப்பர் லாரி, நெடியம் காலனிக்கு செல்லும் வளைவு பகுதியில் பேருந்து நிழற்குடை அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 2 உயரழுத்த மின்கம்பங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதியதில் மின்கம்பங்கள் உடைந்து கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது, பேருந்து நிழற்குடையில் வேலைக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் உடனடியாக மின்தடை செய்யப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்து சேதமான மின் கம்பங்கள், கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிப்பட்டு அருகே இன்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்தியது.