பள்ளி ஆசிரியர்கள் டார்ச்சர்; வால்பாறை அரசு பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை: 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
கோவை: கோவை வால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களின் டார்ச்சர் காரணமாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க சம்மதித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன்(39), வல்சல குமாரி ஆகியோரது மூத்த மகள் முத்து சஞ்சனா(14). இவர், வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மாணவியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.
பின்னர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக மாணவி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் பள்ளியில் அவரது பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் எனவும், அவர்கள் மாணவியை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும், அதனால் மனஉளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாணவியின் தன்தை சக்திவேல் குமரன் கூறியதாவது: நான் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக உள்ளேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எனது மூத்த மகள் முத்து சஞ்சனா 9-ம் வகுப்பும், இரண்டாவது மகள் முத்து சாய்னா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி காலையில் எனது மூத்த மகள் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நான் மருத்துவமனையில் சென்று பார்த்தேன்.
அப்போது எனது மகளிடம் கேட்ட போது, பள்ளியின் உள்ள அறிவியல் ஆசிரியர் சிந்தியா என்பவர் பலபேர் முன்பு தன்னை அவமானப்படுத்தியதாக கூறினார். மேலும், தமிழ் ஆசிரியர் ராணிபாய், மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து மனஉளைச்சலை ஏற்படுத்தினார் எனவும், ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி தொடர்ந்து தனது உருவம், நிறத்தை குறித்து கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மூன்று பேரும் தொடர்ந்து செய்த டார்ச்சர் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி, எனது மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது இறப்புக்கு ஆசிரியர்கள் தான் காரணம். எனவே, ஆசிரியர்கள் 3 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், சிஇஓ ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.