சாத்தனூர் அணையில் இருந்து இன்று உபரி நீர் வெளியேற்றப்படும் என அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 4 மணியளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று மதியம் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக சாத்தனூர் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீர் மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது.
சாத்தனூர் அணையின் நீர்வரத்துப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அணையின் நீர்மட்டம் 114 அடிக்கு மேல் உபரி நீரினை பாசன விதிமுறைகளின்படி வெளியேற்ற வேண்டியுள்ளதாலும் இன்று 12.09.2025 பிற்பகல் 4.00 மணியளவில் நீர்மின்நிலையம் வழியாக 1000 கன அடி நீர் வெளியேற்றப்படும். மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடி வரை வெளியேற்றப்படும். மேலும் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒவ்வொரு 5,000 கன அடி அதிகரிக்கப்படும் பொழுது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். வருவாய் துறை, நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.