தூய்மை பணியாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி: தூய்மை பணியாளர் பிரச்னைக்கு விரைவில் முதல்வர் தீர்வு காண்பார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சியில் உறையூரில் 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். அதை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார்.
வடமாநில தொழிலாளர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறும் தகவல் தவறானது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. கால அவகாசம் தேவை. அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். நிச்சயம் முடிவெடுக்கப்படும். அவர்களை 4 முறை நான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தூய்மை பணி பாதிக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே பணியில் உள்ளவர்களைதான் பயன்படுத்தி வருகிறோம். புதிதாக யாரையும் பணியில் எடுக்கவில்லை.
அவர்களது போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்வு ஏற்பட்டவுடன் இன்று அல்லது நாளைக்குள் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும். தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அருமையானது. அந்த நகல் வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கூறி வருகிறார்கள்.