மணல் கொள்ளையனை பிடிக்க சென்ற எஸ்.ஐயை குத்தி கொல்ல முயற்சி: வாக்கி டாக்கி பறிப்பு, பெண் கைது, 4 பேருக்கு வலை
விழுப்புரம்: மணல் கொள்ளை வழக்கில் ஒருவரை பிடிக்க சென்ற எஸ்.ஐயை கத்தியால் குத்திவிட்டு வாக்கி டாக்கியை பறித்து சென்ற கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பி.குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (31). மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர். இவர், தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்து உள்ளார். தீபாவளியை கொண்டாட சுதாகர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து அவரை கைது செய்ய தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. குணசேகரன் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சுதாகர் மற்றும் அவரது சகோதரர் பாலாஜி (28), மனைவி பிரபாவதி (26), தாய் தமிழரசி, தந்தை தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் சேர்ந்து எஸ்.ஐ. குணசேகரனை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அவரது தொண்டையில் கத்தியால் குத்தி உள்ளனர்.
மேலும் அவரது வாக்கி டாக்கியையும் பறித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ. குணசேகரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சுதாகர் உள்ளிட்ட 5 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுதாகர் மனைவி பிரபாவதி கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவான சுதாகர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.