காலாற்படை தினத்தையொட்டி வெலிங்டன் ராணுவ வீரர்களின் நினைவு தூணில் வீரவணக்கம்
குன்னூர் : குன்னூர் வெலிங்டனில் 79-வது ஆண்டு காலாற்படை தினத்தை முன்னிட்டு வெலிங்டன் போர் நினைவு தூணில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் காலாற்படையினர் ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்.
நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, காலாற்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் நேற்று 79-வது காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து காலாற்படை தலைவரும், ராணுவ பயிற்சி மைய கமாண்டன்ட் கிறிஸ்து நேந்து தாஸ் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் பிரிகேடியர் எஸ்.கே.தத்தா ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ராணுவ உயரகாரிகள், முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.