சேலத்தில் போராட்டம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற எஸ்.ஐ.யை தாக்கி சிறைபிடித்த பெண்கள்
சேலம்: சேலத்தில் கம்பெனி மூடப்பட்ட விவகாரத்தில் உளவுப்பிரிவு அதிகாரியை தாக்கிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் புதுரோடு அருகே தனியார் எலக்ட்ரானிக் கம்பெனி செயல்பட்டு வந்தது. இங்கு 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஜூலை 1ம் தேதி இந்த கம்பெனி மூடப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர்கள் கம்பெனியை திறக்க வேண்டும் என கூறி கடந்த 1ம் தேதி முதல் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பாமக எம்எல்ஏ அருள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அந்நேரத்தில் அங்கு வந்த உளவு பிரிவு எஸ்எஸ்ஐ ராஜசேகரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு, நீங்கள் அரசுக்கு சரியான ரிப்போர்ட் போட்டு இருந்தால் எங்களுக்கு சம்பளம் வந்திருக்கும். சம்பளம் வராததற்கு நீங்கள் தான் காரணம்’ என கோஷமிட்டனர்.
அப்போது, 2 பெண்களை விலக்கிவிட்டு சென்ற அவரை காவலாளி அறையில் சிறைவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, பெண்கள் சிறைபிடித்து வைத்திருப்பது குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடம் விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டார். பெண்கள் தாக்கியதில் எஸ்.ஐ.க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் போராட்டக்காரர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.