மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இ-நாம் திட்டம் மூலம் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய அழைப்பு
*உள்ளூரில் பூண்டு விற்பனை செய்யலாம்
ஊட்டி : இ-நாம் திட்டத்தில் விளை பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகவிலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இ-நாம் முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும்.
பிறமாவட்டம், பிற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்று ஏலம் கோர முடியும். மேலும், துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்றது. தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவாக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணைவாயில் வணிகம் என்ற முறை அரசால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைப் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைத்திடும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம், தோட்டத்திற்கே ஒழுங்கு முறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று, இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருவதுடன், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுக்கா, எடப்பள்ளி ஊராட்சி, பெட்டடி சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 14ம் தேதி வியாக்கிழமை முதல் இ-நாம் முறையில் ஏலம் நடத்தப்பட உள்ளது. மேலும், பிரதி வாரம் (வியாழக்கிழமை) தோறும் பூண்டு ஏலம் நடத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் விளைவிக்கும் வெள்ளை பூண்டினை விற்று பயனடையலாம்.
எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணைவாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பூண்டிற்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டிகளிலேயே கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மண்டிகள் நிர்ணயம் செய்யும் விலையே விவசாயிகளுக்கு இது வரை கிடைத்து வருகிறது. தற்போது இ-நாம் திட்டத்தின் மூலம் பிரதி வாரம் வியாழகிழமை பூண்டு ஏலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இனி நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பூண்டுகளை இங்கேயே விற்பனை செய்யலாம். அரசு மூலம் ஏலம் நடப்பதால், பூண்டிற்கு அதிக விலை கிைடக்க வாய்ப்புள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் கொண்டுச் செல்லும் வாகன வாடகை, இறக்கு மற்றும் ஏற்றுக் கூலி போன்றவைகள் குறையும் என்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.