ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.1ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை!!
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1ஆக பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை நகரமாக கம்சங்கா பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தின் அருகே இன்று காலையில் 8.03 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் கடற்பரப்பில் ராட்சத அலை உருவாகும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடல் அலைகள் சுமார் 4 மீட்டர் அளவுக்கு எழுந்தது குறிப்பிடத்தக்கது.