ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன் இறந்து விட்டதாக வதந்தியால் பரபரப்பு
தண்டையார்பேட்டை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நாகேந்திரன். பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும் என கேட்டிருந்தார். போலீசார் அனுமதி மறுத்ததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு நாகேந்திரன் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.