ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது ஆளுநர் அவதூறு பரப்புகிறார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது ஆளுநர் அவதூறு பரப்புகிறார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சூழல் குறித்து ஆளுநர் ரவி தனது சுதந்திர தின உரையில் பேசியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே.
ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.
கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.