ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு தோனி வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி
சென்னை: ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, தோனியின் வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.