ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை: பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்ப வைத்துள்ளனர்; ஆம்ஸ்ட்ராங் தம்பி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தப்ப வைத்து விட்டார்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் வைக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, வழக்கு கோப்புகளை மாநில காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். சமீபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படும் நாகேந்திரன் இறக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை அரசு தரப்பு தப்பிக்க வைத்துவிட்டது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அஸ்வத்தாமன், அரிகரன் மற்றும் அஞ்சலை ஆகிய மூவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நவம்பர் 10ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.