ரோபோட்டிக் சிகிச்சை முறையில் பெண் வாயிலிருந்த கட்டி அகற்றம்: மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை அசத்தல்
ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறையில், பெண்ணின் வாயிலிருந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான நிருபர்கள் சந்திப்பு, மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், கழுத்து, தலை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் அருண் மித்ரன் ஆகியோர் கூறியதாவது: வேலூரை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர், வாயில் மிகப்பெரிய கட்டியுடன், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு, கடந்த 23ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. வாய் திறப்பு வழியாகவே முகத்தில் எந்த வெட்டுகளும் இல்லாமல் ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து, அகற்றப்பட்ட கட்டி பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டது. அதில் அது புற்றுநோயற்றது என்பது தெரியவந்தது. இந்த சிகிச்சை முறை மூலம் கடுமையான முகச் சிதைவு தடுக்கப்பட்டது. மேலும், சுவசித்தல், ருசித்தல் மற்றும் விழங்குதல் போன்ற செயல்பாடுகள் முக்கிய நரம்புகள் மற்றும் தசைகள் சிதையாமல் பாதுகாக்கப்பட்டன.
இதன் மூலம், முகத்தில் எந்த வடுக்களோ அல்லது சிக்கல்களோ இல்லாமல் குணமடைந்துள்ளார். செலவுகளை பொறுத்தவரையில் ரோபோட்டிக் சிகிச்சை முறையில் கட்டணம் குறைவு. மேலும் காப்பீட்டு வசதிகளும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார். குணமடைந்த சாந்தகுமாரி கூறுகையில், ‘‘வாயில் உள்ள கட்டிக்காக, கடந்த 2 வருடங்களாக வேலூரில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன். ஆனால் வாய் கட்டியின் வீக்கம் குறையவில்லை.
இதனால், இரவில் தூங்கும்போது சுவாசக் கோளாறு மற்றும் குறட்டை போன்றவற்றால் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். இந்த நிலையில் மியாட் மருத்துவமனைக்கு வந்தபோது, கட்டியின் வீக்கம் அதிக அளவில் இருந்த நிலையில், முகச்சிதைவு இல்லாமல் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டிய அகற்றினர். இப்போது, சுவாச பிரச்னையோ, குறட்டையோ மற்றும் விழுங்குதல் பிரச்னையோ இல்லாமல் நிம்மதியாக உள்ளேன். முன்பு தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். இப்போது நன்றாக இப்போது தூங்குகிறேன்,’’ என்றார்.