நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்பு உள்ளிட்டோர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இரங்கல்: "ரோபோ சங்கர், ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே" என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு இரங்கல்: "நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்" என நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர் மறைவையொட்டி அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், விஜய் அன்டனி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் சில நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ரோபோ சங்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.