சாலையோர கடைகளால் குன்னூர் மார்க்கெட் வியாபாரம் பாதிப்பு
*சப்-கலெக்டரிடம் புகார் மனு
குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு கடைகளை வைத்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இதில் கிடைக்கும் பணத்தை வைத்தே கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம், தொழில் வரி, கொள்முதல் ஆகியவைகள் போக மீதமே வருவாயை ஈட்டி வருகின்றனர்.
இதனிடையே சாலையோரங்களில், வாகனங்களில் வந்து விற்பனை செய்து வரும் வியாபாரிகளால் மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதனை கண்டித்து அனைத்து வணிகர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் குன்னூர் சப்- கலெக்டர், டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அந்த மனுவில் குன்னூர் மார்க்கெட்டில் அதிக வாடகையும், நிலுவைத் தொகையும், வட்டிக்கு கடன்களை வாங்கியும் பல இக்கட்டான நிலைமையில் நாங்கள் வாடகை தொகையை கட்டி வருகிறோம்.
தற்போது சமீபகாலமாக வாகனங்களில் பழங்கள், காய்கறிகள், துணிகள், காலணிகள், கீரைகள், பாத்திரங்கள் போன்றவைகள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாகவும் மார்க்கெட் முதல் பெட்போர்டு வரை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி, வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் உள்ள மருத்துவ செலவு, கல்வி கட்டணம் போன்றவற்றினால் எங்கள் வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதோடு, சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுப்பட்டிருந்தது.