வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணியால் சேறும் சகதியுமாக மாறிய சாலை: பொதுமக்கள் கடும் தவிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் பெருமாள்பட்டு பகுதியில் இருந்து 26.வேப்பம்பட்டு பகுதிக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்லவேண்டும். இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், ‘’26 வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தற்போது மேம்பால பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இயந்திரங்களைக்கொண்டு பாலம் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் இருந்து எடுக்கப்பட்ட மணலை அதே இடத்தில் கொட்டிவைத்துள்ளனர்.
இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள் என பல தரப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த வழியாக சென்றுவந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக சாலை முழுவதும் மணல் பரவி சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகிறது. நடந்துசெல்கின்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சேற்றை அகற்றி பொதுமக்கள் சிரமமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.