சாலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடக்கம்
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் எழுத்து தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பதவிகளுக்கான தெரிவு மேற்கொள்ளப்படும். எனவே மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.