ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரோடு ஷோகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை அடுத்து வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் இன்றைய தினம் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பு கட்சிகள் அதன் நகல் வழங்க வேண்டும் என்றும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவ்வாறு செய்தால் தொடர்ந்து நீண்டுகொண்டே போகும். இதற்கு முடிவு ஏற்படாது போன்ற வாதத்தை முன்வைத்தார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்களுக்கு நகலை வழங்க உத்தரவிட்டு இது தொடர்பாக வியாழக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில்,
*ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு.
* பொதுக்கூட்டங்களை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு பதில்.
*5,000 பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.
*5,000 பேருக்கு குறைவாக திரளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறி முறைகள் பொருந்தாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
*வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கும் நெறி முறைகள் பொருந்தும்.
*தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும்.
*ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என விண்ணப்பிக்க வேண்டும்.
*ரோடு ஷோக்களை பொருத்தவரை பிரச்சாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும்.
* ரோடு ஷோ நடைபெற உள்ள இடங்களை காவல் அதிகாரிகள், கட்சிகளுடன் ஆலோசித்து ஆட்சியர் முடிவெடுப்பார்.
*50,000 பேருக்கு மேல் திரளும் கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
*நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
* திடீரென நடக்கும் போராட்டங்களை பொருத்தவரை ஆட்சியருக்கும் காவல் ஆணையருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
*விண்ணப்பத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
*கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது.
*நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.