7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் 48 மணி நேர தொடர் வேலைநிறுத்தம் தொடக்கம்: பணிகள் முடங்கின
நாகர்கோவில்: காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்துறையினரின் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பணிகள் முடங்கின. வருவாய்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்திட வேண்டும். போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மார்ச் 31ம் தேதி அன்று கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்.
சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அனைத்து தாலுகாக்களிலும் ஒரு சிறப்பு துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நாளையும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் 6 தாலுகா அலுவலகங்கள், 2 ஆர்.டி.ஒ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவுகள் உள்ளிட்டவை பணியாளர்களின்றி பணிகள் முடங்கின. தாலுகா அலுவலகங்களில் தாசில்தார்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலை வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில் 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7 சனி, ஞாயிறு என்பதால் செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறையில் அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.