திருத்தணி பகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்
திருத்தணி: திருத்தணி பகுதியில் வடகிழக்கு பருவமழைக்கு சேதமடைந்த சாலைகள் சீரமைப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு திருத்தணி பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் சென்று வர அவதி அடைந்தனர். மேலும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இந்நிலையில், கன மழைக்கு சேதமடைந்த சாலைகள் விரைந்து சீரமைக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில் திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
வாகன நெரிசல் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த திருத்தணி- சித்தூர் சாலை, பொதட்டூர்பேட்டை- பள்ளிப்பட்டு சாலை, திருத்தணி புதிய பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பின்றி சேதமடைந்த பகுதிகளில் தார் நிரப்பி சாலைகள் சீரமைத்து வருகின்றனர். திருத்தணி உப கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் சேதமடைந்துள்ள பகுதிகள் சீரமைக்கப்படும் என்று கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன் தெரிவித்தார்.