ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் சேதமான பாலம் சீரமைப்பு
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் சேதமான பாலம் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் இந்த இணைப்பு சாலை உள்ளது. மேற்கண்ட பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என பல ஆயிரம் மக்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
தற்போது தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மாநகர பேருந்து தடம் எண்:583-சி, தடம் எண்:583-டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு வழி சலையான இந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வந்தது. இதனால் வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடந்தன. இதனால், ஒரு வழிச்சாலையான இந்த சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடபட்டது. முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் சாலையை 4 வழி சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலபடுத்தபட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.108 கோடி மதிப்பில் சீரமைக்கபட்டது. குறிப்பாக கொளத்தூர், மலைப்பட்டு, மணிமங்கலம், ஆகிய மூன்று இடங்களில் தரை பாலம் அமைக்கப்பட்டன.
இந்த பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு இந்த சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே தற்போது மலைப்பட்டு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் நீட்டியபடி சேதம் அடைந்தன. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்கள் கம்பி சிக்கி பஞ்சர் ஏற்பட்டு அடிக்கடி பழுதடைந்தன. இதனையடுத்து, இந்த பாலம் சீரமைக்கபட்டது. இதேபோல், கொளத்தூர் பகுதியில் அமைக்கபட்ட பாலமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணபட்டன. பின்னர் நெடுஞ்சாலை துறையினர், சாலையை சீரமைத்தனர். இதேபோல் அடுத்தடுத்து மலைப்பட்டு, கொளத்தூர் பகுதியில் உள்ள இர்ண்டு பாலங்களும் சீரமைக்கபட்ட ஒரே ஆண்டில் 3 முறை சேதமடைந்துள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேம்பாலம் அமைக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று முந்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று பாலத்தில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.