ரேணுகாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி உயிர் பிரிந்தது.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ரேணுகாதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. மறைந்த ரேணுகாதேவிக்கு, மகன் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்பட 2 பேர் உள்ளனர். டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்; முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.